Sunday, December 10, 2023

அறுபத்து மூவர் (பக்தியினால் பெருமானை ஆட்கொண்ட பெரியவர்கள் புராணம்)

 


மனிதனுக்கு எதற்காக தெய்வம் தேவைப்படுகிறது. அவனுக்கு அன்னையின் வயிற்றியிலிருந்து பிறந்து வந்திருக்கிறோம் என்று தெரியும். ஆனால் மரணத்துக்குப் பின் தனது நிலை என்ன என்று தெரியாது. வாலிபத்தில் இரத்தத் திமிரில் கடவுள் மறுப்பை கையிலெடுப்பவன், மங்கை ஒருத்தியை கரம்பிடித்து இல்லறத்தில் நுழையும் போதுதான் வாழ்க்கை என்றால் என்னவென்று அறிகிறான். அவன் போட்ட கணக்கு தப்பாகும் போதுதான் விதியைப் பற்றி யோசிக்கிறான். வாடகை கேட்டு வீட்டுக்காரன் கதவைத் தட்டும்போது ஒளிந்து கொள்கிறான். கடன்காரன் கழுத்தை நெரிக்கும் போது அப்பனே முருகா என்று அலறுகிறான்.

 

உலகை வென்ற அலெக்ஸாண்டர் மத்திம வயதைக் கூடத் தாண்டவில்லை. நெப்போலியனோ மனிதர்களற்ற தீவில் அனாதையாகத்தான் இறந்தான். கணக்கு நாம் போடலாம் அது நிகழ வேண்டுமா வேண்டாமா என்று நிர்ணயிப்பவன் அவன். தன்னிடம் கடன் வாங்கியவனை கதியற்றவன் வாங்கிவிட்டான் இருந்தால் கொடுத்துவிடமாட்டானா அவகாசம் கொடுத்தால் தான் என்ன ஏதோ சிறுதொகை தானே என்று மன்னிக்க மனம் வருகிறதா? பிறர் வயிற்றில் அடித்து சேர்த்த பணத்தையெல்லாம் மருத்துவமனையில் கொண்டு போய் கொடுத்துவிட்டு வார்டில் முருகா முருகா என்றால் என்றால் அவன் பழனி மலையிலிருந்து இறங்கி வந்துவிடுவானா? கோயில் நகைகளை களவு செய்து சாப்பிட்டால் உண்ட சோறு செரிக்குமா? சிவன் சொத்து குல நாசம் என்று சும்மாவா சொன்னார்கள். உன் மனைவி பத்தினித் தெய்வமாக இருக்க வேண்டுமென்று நீ விருப்பப்படுவது போலத்தானே மற்றவனும் கருதுவான். பிறர் மனை நோக்கா பேராண்மை என்று தானே சொல்லி வைத்தான் வள்ளுவன்.

 

உடலை மனம் இயக்குகிறது. மனத்தை ஆன்மா இயக்குகிறது. ஆன்மா எதற்காக உடலெடுத்தது. இந்த வாழ்க்கைக்கு நோக்கம் இருக்க வேண்டுமல்லவா? மனிதனின் இலக்கு அவனது வயதுக்கேற்றவாறு மாறுகிறதல்லவா? மாணவப்பருவத்தில் டாக்டராக வேண்டும் என்கிறான். படித்து முடித்ததும் நல்ல வேலை அமைய வேண்டும் என்கிறான். வாலிபத்தில் அழகிற மனைவி அமைய வேண்டும் என்கிறான். மத்திம வயதில் வீடு, வாகனம வாங்க வேண்டுமென்று ஆசை வருகிறது. அறுபதைத் தாண்டியவுடன் பிள்ளைகளை கரை சேர்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். இந்த நாட்டில் யாராவது ஒருவரேனும் எனது வாழ்வின் இலக்கு கடவுளைக் காண்பது என்று சொல்ல முன்வருவார்களா? புழு, பூச்சியாக பிறவியெடுக்காமல் மனிதப்பிறப்பு எடுத்தது எதற்காக என்று யோசித்ததுண்டா? பாரதம் புண்ணிய பூமி என்கிறார்களே எதனால் அப்பெயர் வந்தது என்று எண்ணிப் பார்த்ததுண்டா?

 

அரசன் தன் வெற்றியைக் கொண்டாட வானுயரக் கோபுரம் அமைத்து கோயில் எழுப்பினானே எதற்காக. புத்தமும், சமணமும் கோலேச்சிய மண்ணில் சைவம் எப்படி தப்பிப் பிழைத்தது. அன்னியர்களுக்கு கோயில் நகைகளே பொக்கிஷமாகத் தெரிந்தன அவர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து அவர்கள் பொக்கிஷமாக நினைத்ததை கொள்ளையடித்துச் சென்றார்கள். உண்மையான பொக்கிஷம் அதுவல்ல நான்கு வேதங்களும், உபநிடதமும் பரத மண்ணுக்கே உரியன. அனைத்தும் உணர்ந்த ஞானிகளை இந்த கலியுகத்தில் பிச்சைக்காரன் பரதேசி என்று தான் மக்கள் விளிக்கிறார்கள். நல்லவர் ஒருவர் உள்ளார்எனில் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை இதோ பிச்சையெடுத்துக் கொண்டு போகின்றானே அவனால் தான் மழை பெய்கிறது இதை நீங்கள் அறிவீர்களா?

 

நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் வளத்தையெல்லாம் கப்பலில் தங்கள் நாட்டுக்கு கொண்டுபோய் இறக்கினார்கள். அவர்கள் கண்ணுக்கு அது பெரிதாகத் தெரிந்தன. கைலாயம் அவர்களைப் பொருத்த வரை ஒரு பனிமலை, கங்கை ஒரு நதி அவ்வளவுதான். இந்தியாவில் ஒரு காசி தான் இருக்கிறதா, ஊரில் இருக்கின்ற ஒவ்வொரு சுடுகாடும் காசிதான். சிவன் என்ன கோயிலுள்ள உள்ள பள்ளியறையிலா இருக்கிறான். அவன் சாம்பலைப் பூசிக்கொண்டு சுடுகாட்டில் தான் இருக்கிறான். நாம் இறந்த பிறகு சிவலோத்தில் சிவனை சந்திக்கலாம், ஆனால் தாம் வாழும் காலத்திலேயே சிவனை சந்தித்தவர்கள் அறுபத்து மூவர், அவர்களைத்தான் நாம் நாயன்மார்கள் என்கிறோம். சிவாலயங்களில் அறுபத்து மூவர் சிலையை வைத்து வணங்குகின்றோம். அவர்களது வரலாற்றைத் தான் நாம் அடுத்த அத்தியாயத்திலிருந்து பார்க்க இருக்கின்றோம்.

Friday, September 29, 2023

சத்திய சோதனை


 

சத்தியமே கடவுள் என்றவர் மகாத்மா காந்தி. எல்லா நாடுகளும் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆளும் அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த காந்தி அகிம்சையை தேர்ந்தெடுத்தார். வாழ்க்கை அவரைப் பரிசோதித்தது ஆனால் அவர் எள்ளளவு கூட களங்கம் இல்லாதவராக இருந்தார். அவர் ராமரை வணங்கியதால் தீய எண்ணங்கள் அவர் மனதிலிருந்து எழுவதில்லை. சத்தியத்தின் வழி நடந்ததால் அவர் பேச்சுக்கு மதிப்பு இருந்தது. அவர் இந்து மதத்தில் பிறந்திருந்தாலும் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவராக இருந்தார். சொந்த வாழ்க்கைக்காகவோ குடும்ப நலனுக்காக தனது அதிகாரத்தை சுயநலத்துக்காகவோ அவர் பயன்படுத்தியது கிடையாது. தியாக மனப்பான்மை உள்ளவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் சாவதற்கு தயாராய் இருக்க வேண்டுமென்றார். பிரிட்டிஷாரின் ராஜதந்திரங்களால் அவர் பொறுமையை இழந்துவிடவில்லை. போராட்டத்தின் தோல்விகளிலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொண்டார். வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் எதற்காக செலவழிக்க வேண்டுமென்று திட்டமிடல் இருந்ததால் தான் அவர் மகாத்மா என போற்றப்படுகிறார். எதிலும் பற்றற்ற துறவு மனத்தால் தான் அவர் ஓராடை தரித்தார்.

 

காந்தி சிறு வயதிலேயே தாயையும், தந்தையையும் இரு கண்களைப் போல் வைத்து காக்க வேண்டுமென உறுதி பூண்டார். அரிச்சந்திரன் நாடகத்தை பார்த்தவுடன் பொய் பேசுவதைக் கைவிட்டார். காந்திக்கு சிறுவயதிலிருந்தே தாமதமாகப் போவது பிடிக்காது. ஒழுக்கம், நேர்மை, வைராக்கியம் கொண்டவராக இருந்தார். தாய் தந்தைக்கும், ஆசிரியருக்கும் நாம் தரும் பரிசு நன்னடத்தையே என அவர் உணர்திருந்தார். அக்கால வழக்கப்படி பதிமூன்று வயதிலேயே காந்தி கஸ்தூரிபாயை கரம் பிடித்தார். தந்தையின் உயிர் பிரியும் போது தான் அவர் அருகில் இல்லையே என்று எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறார் காந்தி. பதினெட்டு வயதில் காந்தி ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற இங்கிலாந்து கிளம்பினார். லண்டனில் வசித்தபோது மது அருந்த மாட்டேன், பிற மாதர்களை விரும்ப மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன் என்று தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறவில்லை. இருபத்திரண்டு வயதில் 1892 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ந்தேதி நாடு திரும்பிய போது அவரது தாய் உயிருடன் இல்லை. காந்தி இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர். நீதிபதியின் முன் தமது கட்சிக்காரரின் வழக்கை எடுத்துரைக்க எழுந்து நின்ற அவரால் பேசமுடியவில்லை எந்த இடத்திலும் நிலையாக இருந்து அவரால் பொருள் ஈட்ட முடியவில்லை.

 

பிறப்பால் உயர்ந்தவர் யாருமில்லை அவர் உயர்ந்தவரா தாழ்ந்தவரா என அவரது செயல்பாடுகள்தான் தீர்மானிக்கிறது என்ற கருத்துடையவர் காந்தி. தீண்டாமை மனித சமூகத்திடமிருந்து களைந்தெடுக்க வேண்டிய பயங்கரவாதம் என்பதில் உறுதியாக இருந்தார். அரசியலமைப்புச் சட்டப்படி அமைச்சர்கள் மக்கள் சேவகர்கள் தான் அவர்கள் ஒன்றும் எஜமானர்கள் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார். தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய போது கூட தனக்கு அளிக்கப்பட்ட வெகுமதிகளை தான் தொடங்கிய  ஆசிரமத்திற்கு அளித்துவிட்டுத்தான் புறப்பட்டார். சகோதரியின் வாழ்க்கைச் செலவுக்கு தன்னிடம் கையில்பணமில்லை என்பதால் பிராண ஜீவன் மேத்தாவிடம் மாதம் பத்து ரூபாய் அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். சகோதரிமகள் விதவையாகி தாயிடம் வந்துவிட தங்களுக்கு பத்துரூபாய் போதவில்லை என சகோதரி காந்திக்கு கடிதம் எழுதினார். பொதுச் சொத்தை சொந்த நலனுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்த காந்தி மேலும் பணம் அனுப்பும் நிலையில் நானில்லை என்று பதிலளித்தார். மகாத்மா காந்தி உயிருடன் இருக்கும்போதே அவரது தொண்டர்களால் கூட இந்தக் கொள்கையை கடைப்பிடிக்க முடியவில்லை.

 

இந்தியா விடுதலையடைந்த நாளான 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் நாடே கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்க விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்று விடுதலைப் பெற்றுத் தந்த காந்தியோ டில்லியிலேயே இல்லை காஷ்மீரில் ஒரு கிராமத்தில் பற்றி எரியும் மதக்கலவரத்தை அடக்க ஒரு ஏழை இஸ்லாமியர் வீட்டில் தங்கியிருந்தார். காந்தியின் கண்ணெதிரிலேயே இந்து – முஸ்லீம் கலவரத்துக்கு நாடு நல்ல விலை கொடுக்க நேர்ந்தது. மதவெறி இந்தியாவை இரண்டு துண்டாக்கியதோடு அல்லாமல் மாத்மாவின் உயிரைப் பறித்தது. அரிஜனர்களில் ஆலயப் பிரவேசத்தை முன்னிறுத்தி காந்தி தொடங்கிய யாத்திரை ஒரிஸ்ஸா வந்தடைந்தது. காந்தியின் மனைவி கஸ்தூரிபா ஜகன்னாதபுரி ஆலயத்துக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட காந்தி நான் என்னை அரிஜனன் என்று கருதுபவன் எங்களை போவிலுக்குள் அனுமதிக்காத போது நீ எப்படி சென்று வரலாம் என கோபித்துக் கொண்டார். அவரது உடல் நலிவுற்று மயக்கமடைந்தார், மருத்துவர் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டவுடன் தன்னிலை அடைந்தார். சாதியுணர்வு,  மதவெறியற்ற இந்தியாவை கனவு கண்டவர் காந்தி.

 

காந்தி தனது பேச்சிலும் எழுத்திலும் குறிப்பிட்டது இதுதான். ‘நீங்கள் ஒழுக்கமுடன் வாழ்ந்தால் எது கடவுளோ அதற்கு அருகில் கொண்டு செல்லப்படுவீர்கள். கடவுள் சத்தியப்பேரொளி வாழ்க்கையில் ஒழுக்க நெறி தவறாதவர்கள் தான் கடவுளைக் காண முடியும். இறையச்சம் கொண்டவர்களின் எண்ணம் களங்கமில்லாமல் இருக்கும். தர்மத்தை நிலைநாட்ட கடவுள் வரவேண்டிய அவசியமில்லை அதற்காகத்தான் உன்னையும் என்னையும் படைத்திருக்கிறார். கட்டுப்பாடற்ற மதமும் நாடும் இப்போது இல்லையென்றாலும் ஒருநாள் சீரழிவைச் சந்திக்கும். கடவுள் உனக்கு கருணைகாட்ட வேண்டுமென்றால் நீ உனக்கு கீழே உள்ளவர்களுக்கு கருணைகாட்ட வேண்டும். அன்பே கடவுள், உண்மையே தெய்வம், நியாயமே இறைவன் இதில் உறுதி கொண்டிருந்தார் காந்தி. காந்தி பணி நியமித்தமாக ரயிலில் டர்பனிலிருந்து பிரிட்டோரியாவுக்கு செல்லும் வழயியில் ஒரு வெள்ளைக்காரப் பயணி காந்தி அமர்ந்திருக்கும் பெட்டிக்கு வந்தார் காந்தி அமர்ந்திருப்பதை பார்த்து அவருடன் வாக்குவாதம் செய்தார் காந்தி இருக்கையைவிட்டு எழுந்து வேறு பெட்டிக்கு போக மறுக்கவே ரயில்வே கண்காணிப்பாளரிம் புகார் செய்தார். எவ்வளவோ வாதம் செய்தும் போலீஸ்காரர்கள் காந்தியை நடுவழியில் இறக்கிவிடப்பட்டார். இந்தச் சம்பவம் காந்தியின் வாழ்க்கையே மாற்றியது. தென்னாப்பிரிக்க ஆங்கிலேயரின் நிறவெறியின் ஒருவகை வெளிப்பாடு இது என்பதை உணர்ந்தார். இனவெறியை களைவதற்கான போராட்டத்தை தன்னிலிருந்து ஆரம்பிப்பதற்கான காரியங்களில் அவர் மனது ஈடுபட்டது. சார்லஸ் டவுனிலிருந்து ஜோகன்னஸ்பர்க் நகருக்குள் சாரட் வண்டியில் பயணம் செய்த போதும் நிறவெறியின் மோதுமான அனுபவத்தை அடைந்தார் காந்தி.

 

தென்னாப்பிரிக்காவில் இந்து, முஸ்லீம், பார்சி, கிறிஸ்தவர், குஜராத்தி, மதராஸி, பஞ்சாபி முதலியவர்களை ஒன்றிணைப்பதில் காந்தி முக்கியப் பங்கு வகித்தார். நிறவெறியை ஒழிக்க வேண்டுமென்ற காந்தியின் கருத்து எல்லாக் கூட்டங்களிலும் ஒலிக்க ஆரம்பித்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய டால்ஸ்டாய் பண்ணைக்கு 1902ஆம் ஆண்டு கோகலே வருகைதந்த போது காந்தியைச் சந்தித்தார். அந்த சந்திப்புதான் காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்டது. இந்தியா திரும்பிய காந்தியை தாகூர்தான் முதன்முதலில் மகாத்மா என்றழைத்தார். முதல் உலகப்போரில் இந்தியர்களை ராணுவ சிப்பாய்களாக அணிதிரட்ட வெள்ளைய அரசாங்கம் காந்தியை கேடயமாக பயன்படுத்திக் கொண்டது. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதின்மூன்றாம் இந்தியாவுக்கு கறுப்பு நாளாக அமைந்தது. அன்றுதான் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் ‘ரெளலட் சட்ட’த்தை எதிர்த்து ஜாலியன்வாலாபாக் என்ற மைதானத்தில் ஒன்று கூடிய மக்களை ‘ஜெனரல் ஓ டயர்’ என்பவனின் உத்தரவின் பேரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். அதைக் கண்டித்து உள்நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தின்போது காந்தி வயல் ஒன்றில் அரை ஆடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த குடியானவனை சந்தித்தார். அதுமுதற்கொண்டு அவனைப் போன்றே அரை ஆடை அணியத் தொடங்கினார்.

 

1928 ஆம் ஆண்டு காந்தி தலைமையில் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுதந்திரம் பெறுவதே நமது குறிக்கோள்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தண்டியாத்திரையில் காந்தியின் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். காந்தி – இர்வின் சந்திப்பு குறித்து பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் கருத்து தெரிவித்தபோது ‘காந்தி ஒரு அரை நிர்வாணப் பக்கிரி பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டு வரும் அவர் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதியான வைஸ்ராய்க்குச் சமமாக அமர்ந்திருப்பது எவ்வளவு அருவருக்கத்தக்க விஷயம்’ என்று கூறினார். பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு எவ்வித உரிமையும் வழங்க விரும்பவில்லை என்பதனை அறிந்த காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறக் கோரும் தீர்மானம் நிறைவேறியது. அடுத்த நாள் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் எல்லோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் போராட்டத்தின் விளைவாக ‘கிளமண்ட் அட்லி’ தலைமையிலான மந்திரிசபை இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க சம்மதித்தது. காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட பின் ஜின்னா வெளியிட்ட அறிக்கையில் ‘ஒரு நல்ல இந்து இறந்துபோனான்’ எனக் குறிப்பிட்டது இங்கு நினைவுகூறத் தக்கது.

Saturday, January 29, 2022

ஜனவரி 30 காந்தியடிகளின் நினைவு தினம் மண்ணின் மகாபுருஷர் காந்தி எப்போது மகாத்மா ஆனார்

 


ரயில் வண்டியிலிருந்து வெள்ளைக்காரர்களால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார் காந்தி. அவருக்கு என்ன நடந்தது எனப் புரியவே சில நிமிடங்கள் ஆனது. நிறவேறுபாட்டினால் மட்டும் அவர்கள் தன்னைவிட உயர்ந்தவர்களாகிவிடுவார்களா என்ற கேள்வி அவர் மனத்தில் எழுந்தது. சகபயணியாக தன்னோடு பயணம் செய்வதற்கு அவர் ஏன் சங்கோஜப்படவேண்டும். என்னைக் கீழே தள்ளி ஷு கால்களால் மிதிப்பதற்கு எந்த மதப்புத்தகம் அவருக்கு கற்றுக் கொடுத்தது.

 

படைப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு உண்டா என்ற கேள்வியை அவர் கடவுள் முன் வைத்தார். சக மனிதன் என்ற கருணையில்லாமல் இப்படிச் செய்பவர்கள் மனஅளவில் இன்னும் மிருகமாகத்தான் இருக்கின்றார்கள். பிறப்பு நம் கைியில் இல்லாதபோது பிறந்ததால் நான் உயர்ந்தவன் என்று எவ்வாறு கூறிக் கொள்ள முடியும். தீண்டத்தகாதவர்கள் எனக் காற்று நினைக்கிறதா, இயற்கையின் தவப்புதல்வர்களில் அவர்களும் ஒருவர் தானே.

 

மரணம் நம்மை திகம்பரனாக்கிவிடுகிறது. நாம் இறப்புக்கு பின் எதையும் கொண்டு போக முடியாது. அப்படி இருந்தும் தான் உயர்ந்தவனென்று இவர்கள் அகங்காரம் கொள்கிறார்களே. கருமேகத்திலிருந்து மழைத்துளி விழுவதற்காக அவர்களால் வானத்தை வெறுக்க முடியுமா? தன்னைத் தானே வெற்றி கொண்டவர்கள் யாரேனும் இப்படி நினைப்பார்களா? சமூகம் புறஅடையாளத்தை வைத்தே மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிறது.

 

இருதயத்திலிருந்து வாழ சமூகம் இடமளிக்காது. பாலகனாய் இருக்கும் போதே சமூகம் அவர்களுக்கு விஷத்தை தந்துவிடுகிறது. தரகர்கள் சமூகத்தை ஏய்த்துப் பிழைக்க வேண்டுமென்பதற்காக சமூகத்தை இருகூறாய் பிரித்து வைத்திருக்கிறார்கள். மதிப்பு வாய்ந்த மனிதர்கள் கூட பிறரின் புறத்தோற்றத்தைப் பார்த்து மனம் உவந்து கேலி செய்கின்றனர். இன்னொரு மனத்தை மகிழச் செய்வதுதானே இந்த வாழ்க்கையின் பரிசாக இருக்க முடியும். இவர்கள் கைகளில் உள்ள அதிகாரத்தால் சூரியனை உதிக்காமல் செய்துவிட முடியுமா?

 

இந்த உலகத்தில் புழுவைப் போன்றவன் தானே மனிதன். இறக்கை முளைத்துவிட்டது என்பதற்காக பட்டாம்பூச்சியால் வானத்தை அளக்க முடியுமா? கடவுள் நம்மை மடியச் செய்வதற்கு கரும்பலகையில் எழுதி  அழிக்கின்ற காலஅளவு கூட ஆகாது. கையில் ஆயுதம் ஏந்தாமல் இவர்களை எதிர்க்க முடியுமா? எதிர்ப்பவர்களுக்கு அடக்குமுறையால் பதில் சொல்லும் இவர்கள். அஹிம்சையால் எதிர்ப்பைக் காட்டினால் என்ன செய்வார்கள். உயிரை துச்சமென நினைத்தால் பீரங்கி முன்பு கூட நம்மால் அஞ்சாமல் நிற்க முடியும் அல்லவா.

 

புரட்சிக் கனலை மக்கள் உள்ளத்தில் ஏற்றி வைத்தால் அந்த அக்னியை வெள்ளைக்காரர்களால் அணைக்க முடியுமா? அடக்குமுறையை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டால் சாத்தியமாகாதது ஏதேனும் உள்ளதா? ஜனங்களிடம் உத்வேகத்தை விதைத்தால் இரும்புக் கோட்டைகள் கூட தூள் தூளாக நொறுங்கி விழும் அல்லவா. யாவர்க்கும் பொதுவாம் நீதி என்பதை நிலைநாட்டிட அக்கிரமக்காரர்களை கூண்டோடு ஒழித்திட என் வாழ்நாள் முழுவதையும் செலவழிப்பேன் என காந்தி முடிவு செய்த போது அவர் சாதாரண ஆன்மாவிலிருந்து மகாத்மாவானார்.

Wednesday, January 19, 2022

ஏலியன்கள் தான் கடவுளா? (இதுவரை வெளிவராத ரகசியங்கள்)


சிந்திக்கும் திறனுள்ள ரோபோவைக் கண்டுபிடிக்க மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். மனித இனம் உருவாகி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றது என்று வைத்துக்கொள்வோம். வெறும் தாவரங்களும், நீர்நிலைகளும், மலைகளும் பூமியில் இருந்த சமயத்தில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்துள்ளார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் இப்போதைய காலகட்டத்தைவிட உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். ஏலியன்கள் தான் வேற்றுக்கிரகத்தில் வாழ்ந்த மனிதர்களை பூமிக்கிரகத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். மனிதர்கள் வாழ்ந்த கிரகம் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது என்று தெரியவந்ததால் ஏலியன்கள் மனிதர்களைக் காப்பாற்றும் பொருட்டு அவர்களை பூமியில் விட்டுச் சென்றிருக்கலாம்.

 

உலகம் அழியும் போது கடவுள் தோன்றுவார் என்று சமய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஏலியன்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்ந்த மனிதர்கள் முன் தோன்றியிருக்கக்கூடும். ஏலியன்களின் உட்சபட்ச கண்டுபிடிப்பு மனிதனாகக்கூட இருக்கலாம். பூமியை தங்களது கேந்திரமாகப் பயன்படுத்த மனிதனை கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றன ஏலியன்கள். பூமியை வளப்படுத்துவது அவர்களது எண்ணமாக இருந்திருக்காது. ஏலியன்கள் தன்னை ஒத்த சக்தி படைத்த வேற்றுக்கிரகவாசிகளுடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. அதனால் தான் மனிதனை சிருஷ்டித்து பூமியில் உலவவிட்டிருக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் எதிரிகள் பூமியை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுத்துவிடலாம் என்பதுதான் ஏலியன்களின் திட்டமாக இருக்கும்.

 

வேற்றுக்கிரகத்தில் வாழ்ந்த தாக்கத்தினால்தான் மனிதர்களுக்கு கனவுகள் தோன்றுகிறது. அந்த கிரகம் சூரியனுக்கு வெகுதொலைவில் இருந்திருக்க வேண்டும் அதனால் தான் மனித இனத்துக்கு வெப்பம் தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை மறுப்பவர்கள் ஒன்றை எண்ணிப்பார்க்க வேண்டும். டார்வினின் பரிணாமக் கொள்கையில் குரங்கு மட்டும் ஏன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். வேறு உயிரினங்கள் ஏன் பரிணாம வளர்ச்சி அடையவில்லை என எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

நோய்கள் அதிகமாக தாக்குவதற்குக் காரணம் இங்குள்ள தட்பவெப்பநிலையை மனித இனம் இன்னும் சமாளிக்க முடியாமல் திண்டாடுவதையே காட்டுகிறது. பூமியில் உள்ள எந்தவொரு உயிரினத்துக்கும் தான் மரணித்துவிடுவோம் என்ற உண்மை தெரியாது. மனிதனுக்கு மட்டும் அந்த உணர்வு எப்படித் தோன்றுகிறது. இது அவன் பூமியோடு சம்மந்தப்பட்டவனல்ல என்பதையே நிரூபிக்கிறது. வாழ்நாளில் பார்த்திராத ஒன்றைப் பற்றி ஓவியம் வரையச் சொன்னால் ஓவியரால் வரைய இயலுமா? நமது மூதாதையர்கள் ஏலியன்களை நேருக்கு நேராக சந்தித்ததினால்தான் திரைப்படங்களில் ஏலியன்களின் உருவத்தை துல்லியமாக மனிதர்களால் கொண்டுவர முடிந்தது.

 

ஏலியன்கள் மனிதர்களின் செயல்களை மட்டுமல்லாது அவர்களது எண்ண அலைகளைக் கண்டுபிடிக்கவே நிலவினை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என தெரிய வருகிறது. நிலா ஒரு spacejet ஆகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. நம்மால் நிலவுக்குத்தான் மனிதனை அனுப்ப முடிந்தது. செவ்வாய்க்கு போனால் மனிதனால் திரும்ப முடியாது என நாசாவும் ஒத்துக்கொள்கிறது. அப்படியிருக்க எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள கிரகத்திலிருந்து ஒளி வேகத்தைவிட அதிகமான வேகத்திறனில் எப்படி ஏலியன்களைச் சுமந்துகொண்டு பறக்கும்தட்டால் வர முடிகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் தீவு இருக்குமென்றோ கடலைத்தாண்டி கண்டம் இருக்குமென்றோ அங்கு மனிதர்கள் இருப்பார்கள் என்றோ கூறுவதை அப்போது கட்டுக்கதை என்பார்கள் பைத்தியம் முத்திடிச்சி என்று கேலி செய்து சிரிப்பார்கள். இப்போதும் அப்படித்தான் மனிதஇனம் செய்து வருகிறது. மனித இனம் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்று அறைகூவல் விடுகிறது. மனிதன் விலங்குகளை அடிமைப்படுத்திவிட்டான். இயற்கையை தனக்குச் சாதகமாக வளைக்க முற்படுகிறான். அவனது உட்சபட்ச பேராசை மரணத்தை வென்றுவிட வேண்டுமென்பதே. கடவுள் பரமண்டலத்தில் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளும் நீங்கள் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் அதே அளவுகோலினை வைத்துப் பாருங்கள். உலக அழிவைப் பற்றிய வதந்திகள் அவ்வப்போது உலாவருகிறது. அப்படி உலக அழிவு உறுதியாகும் பட்சத்தில் நம்மால் நம் கண்ணெதிரே ஏலியன்களை காணுகின்ற வாய்ப்பினை பெறலாம்.

Friday, January 14, 2022

தேடிக் கண்டுகொண்டேன்


பரமஹம்சம் என்றொரு பறவை வானத்தில் பறந்தபடியே முட்டையிடும் கீழே வரவர பாதி தூரத்திலேயே குஞ்சு பொரிக்கும். மேலும் கீழே வரவர முக்கால் தூரத்திலேயே அந்த குஞ்சுக்கு இறக்கை முளைத்துவிடும். பின் அந்தப்பறவையின் கால்கள் தரையில் படாமலேயே அப்படியே மேல் நோக்கி வானத்தில் சிறகடித்துப் பறந்துவிடும். அது போன்றவர்கள் தான் ஞானிகள். பூமியோடு சம்பந்தப்படாதவர்கள். கடவுளை நோக்கி சென்றுவிட்டவர்கள். பறவையின் உருவம் நீரில் பிரதிபலிப்பதைப் போல நீங்கள் அந்த ஞானியர்களை பார்க்கலாம். ஆனால் அவர்கள் உடலோடு தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். தான் வந்த வேலை முடிந்ததும் பிரகிருதியான ஸ்தூல உடலை விட்டுவிடக் கூடியவர்கள். புருஷனான ஆன்மாவில் நிலைத்திருப்பவர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் கடந்தவர்கள். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர்கள். பலநூறு பேரை கடைத்தேற்றுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள். துன்பம் என்பது மனதுக்கு கொடுக்கப்படும் அடிகள் அப்போதுதான் அது மேலானதை நாடும். வாழ்க்கையின் துன்பத்தையே அனுபவிக்காதவனுக்கு தேடல் இருக்காது ஆத்மவிசாரமும் இருக்காது.

 

இன்பத்தைவிட துன்பம் நல்ல ஆசிரியன். துன்பப்படும் மனமே பிறப்பறுக்கும் வித்தையை நாடும். ஞானிகள் சமுத்திரத்தில் நீந்துபவர்கள் இல்லறமாகிய நதியில் போக்கை அறியாமலா இருப்பார்கள். அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இருந்தால் உலகம் இந்த அவல நிலையை அடைந்திருக்காது. இறை பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதர்களுக்கு வழங்கியுள்ளது. நாம் எத்தனை பேர் உண்மையின் பாதையை தேர்ந்தெடுக்கிறோம். எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு செல்வதற்கு. நீங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்தை நாடுவீர்களா? உங்கள் வேண்டுதலை நிறைவேற்றினால் அது தெய்வம் இல்லையென்றால் கல் அப்படித்தானே. எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தாரால் தாயைத் துறக்க முடிந்ததா? ஆதிசங்கரர் பிரம்மமானாலும் ஆர்யாம்பாளின் பிள்ளை தானே? காகிதத்திற்கு மதிப்பு தந்து நீதானே பணமாக்கினாய் பின் அதையே மூட்டை மூட்டையாக கட்டிவைத்துக் கொண்டு வீட்டை பாதுகாக்கிறாயே ஏன்?

 

உலகாலும் சக்கரவர்த்தியாக இருக்கிறான் நாட்டில் ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் அவனுக்கு செய்தி எட்டிவிடுகிறது ஆட்சிக் கட்டிலில் ஏறிய சில மாதங்களிலேயே நோய் பீடித்து இறந்துவிடுகிறானே எப்படி. அப்போது அறிவை விதி வென்றுவிடுகிறது. மனிதன் போடும் கணக்கு தப்பாகிவிடுகிறது. ஆரம்பத்தில் பிறப்பும் நம் கையில் இல்லை அடுத்தடுத்த நடப்பும் நம் கையில் இல்லை. மனிதன் இரண்டுவிதமான வாழ்க்கையைக் கைகொள்ளலாம் ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம். இரண்டுமே நல்அறங்கள். எல்லாம் இருக்கின்றவர் துறப்பதற்கும் ஒன்றுமே இல்லாதவர் கெளபீனதாரியாக திரிவதற்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லாம் இருந்தும் பட்டினத்தார் ஏன் துறந்தார் என்று கேள்வி கேட்டுப் பாருங்களேன். இந்த இயற்கைதான் நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்கள் தாயின் மார்பில் பாலை சுரக்கச் செய்தது. எல்லோரும் பெண், பொன், பொருள் என்று புறத்தே தானே தேடுகிறோம் அகத்தே தேடுபவர் தன்னுள்ளே தீபவிளக்கை ஏற்றிக் கொள்கிறார். அந்த ஜோதியின் வெளிச்சம் அவனுக்கு உண்மையான உலகத்தைக் காட்டுகிறது.

 

நீங்கள், நான் பார்ப்பதெல்லாம் பொய்யான உலகம் அதைத்தான் மாயை என்கிறார் சங்கரர். மாற்றம் அடைந்து கொண்டே செல்வதுதான் உலக இயல்பு. நாம் இறக்கும் வரை உடல்ரீதியிலான வளர்ச்சியும் மனரீதியிலான வளர்ச்சியும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆட்சி மாறுகிறது, காட்சி மாறுகிறது வென்றவர்கள் தோற்கிறார்கள், தோற்றவர்கள் வெல்லுகிறார்கள் எல்லாம் இந்த மாயஉலகத்துக்கான மோதல்கள். உண்மையில் மனமே உலகை சிருஷ்டிக்கிறது. உள்ளே மனம் எங்கிருந்து எழுகிறது என்று பாருங்கள். தோற்றுவாய் தெரியாது. உறக்கத்தில் எங்கே போகிறது உலகம். நித்யமென்றால் இங்கே தானே இருக்க வேண்டும். படக்காட்சி போல் உலகைக் காண்கிறோம் அதோடு நம்மையும் சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் இங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது. யாருக்கும் தெரியாது. உலகின் நோக்கமே உனக்கு தெரியாத போது நீ ஏன் சிரமப்படுகிறாய் என்கிறார் ஞானி. எவன் படைத்தானோ அவன் பார்த்துக் கொள்ள மாட்டானா. ஸம்பவானி யுகே! யுகே! என்றே சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அதர்மத்தை அழிக்க அவதாரம் தான் வரவேண்டும் என்பதில்லை.

 

யாருக்கு நினைத்தபடி வாழ்வு அமைகிறது. நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்வதைவிட வேறு வழியில்லை. வாழ்க்கை இங்குமங்குமாக நம்மை பந்தாடுகிறது. நாம் கட்டிய கோட்டையெல்லாம் தவிடுபொடியாகிறது. உறவுகளெல்லாம் கண்ணெதிரேயே மறைகிறார்கள். சித்தமே வெடித்துவிடும் அளவுக்கு சித்ரவதை நடக்கிறது. நான் என்ற அகந்தை சம்ஹாரம் ஆனவுடன் தான் சரணடைதல் நிகழ்கிறது. அறிவு கடவுளுக்கும் உனக்குமான தூரத்தை அதிகரித்துவிட்டது. அருணகிரிநாதரைப் பற்றி பேசினால் கட்டுக்கதை காதில்பூ சுற்றுகிறார்கள் என்கிறாய். அதனால் தான் உன் அகந்தை மரித்தவுடன் கடவுள் எதிரே வந்துவிடுகிறார். தெய்வம் மனுஷ ரூப. ஜீவனுடைய இலக்கு முக்தி கடவுள் உங்களை முக்தர்களாக்குவதற்கே மீண்டும் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்கச் செய்கிறார். ஏதாவதொரு பிறவியில் சிதறும் ஞானத்தீப் பொறிகளால் உள்ளுக்குள் பற்றிக்கொள்ள  மாட்டாயா எனக் காத்திருக்கிறார்.

 

கடவுள் கருவில் தங்கும் கர்பத்தை மட்டும் உருவாக்கியதோடு தன் வேலையை நிறுத்திக் கொள்ளாமல் அவரே உன் குருவாக அவதரித்து உன்னைத் கடைத்தேற்ற வழி வகுக்கிறார். ஆகாரம் என்பது உணவு மட்டுமல்ல ஐந்து புலன்கள் வழியாக செல்லும் ஒவ்வொன்றுமே ஆகாரம் தான். பார்ப்பது, கேட்பது, உணர்வது, நுகர்வது, சுவைப்பது என எதன் வழியாக தகவல் சென்றாலும் அதுவும் ஆகாரமே. நல்லதை நாம்தான் தேடிப் போக வேண்டும் கெட்டது நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்துவிடும். ஜீவகாருண்யம் என்பது புலாலை மறுப்பது மட்டுமல்ல புலன்களுக்கு கடிவாளம் போடுவதுதான். ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு திசையில் செல்வதை தவிர்ப்பது தான். வேட்கையுடன் திரியும் புலன்களை வழிக்கு கொண்டுவருவது தான். நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு புறத்தே அலையும் புலன்களை அகத்தே பார்க்க வைத்தால் ஞானவாசல் திறந்துவிடும். எல்லாம் உனக்குள்ளே இருக்கிறது அதனால் தான் கடவு(உ)ள் என்றார்கள்.

 

எல்லோரும் கோயிலுக்குப் போகிறோம் வணங்குகிறோம் வேண்டுகிறோம். அவர் நமக்கு கொடுப்பதற்கு கடமைப்பட்டவர் என்றே நினைக்கிறோம். மாகாணம் மைய அரசிடம் கையேந்தி நிற்பதில்லையா அதுமாதிரி. புதையலுக்கு மேலே உட்கார்ந்து பிச்சையெடுத்தானே அந்தக் கதைதான். எல்லோரும் எதன் பின்னாடி ஓடுகிறார்களோ அதன் பின்னாடி ஓடுகிறோம். நமக்குள்ளே உள்ளவற்றின் மதிப்பு தெரிவதில்லை அதனை குப்பை என்றே கருதுகிறோம். கல்லும், வைரமும் பூமிக்குள் இருந்து வருபவை. கல்லை அலட்சியப்படுத்துகிறோம் வைரத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறோம். எதன் பொருட்டு பிறவியெடுத்தோம் என்பதையே மறந்துவிடுகிறோம். பிறருக்கு உபதேசம் செய்ய நமக்கு தகுதியிருக்கிறதா என முதலில் பார்ப்பதில்லை. கனவு நனவானால் வாழ்க்கை இனிக்கும். கனவு நிறைவேறாமல் போனால் வாழ்க்கை கசக்கும். காயம்பட்டவுடன் தான் கடவுளை நினைக்கிறான். கோடிகளில் புரள்பவனிடம் கடவுளுக்கு என்ன வேலை. வீட்டு பூஜை அறையில் ஆளுர விநாயகர் சிலை இருக்கும் ஆனால் மனதில் ஏழைகளின்பால் கருணை இருக்காது. இவன் என்ன தான் கத்தினாலும் பிள்ளையார் இவன் வீட்டு வாசற்படியைக்கூட மிதிக்க மாட்டார்.

 

சுவர்க்கமும், நரகமும் உனக்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு பணமிருக்கிறது என்று பார்த்து வழங்கப்படுவதில்லை. உனது புண்ணிய கணக்கை பார்த்துதான் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு போ போகாமல் இரு அது முக்கியமில்லை அவன் படைப்பின் மீது அன்பு செலுத்த வேண்டும். அன்பே சிவம். வாழ்க்கையில் வேர்விட்டுவிட்டாய் என்றால் மரணம் அடியோடு சாய்க்கும்போது பெருந்துயரமாக இருக்கும். அதனால் தான் தாமரை இலை தண்ணீர்போல என்றார்கள். எப்போதும் கிளம்புவதற்கு தயாராய் இருக்க வேண்டும். எல்லாம் சுடுகாட்டுப் பிணங்கள் இதையே கட்டிக் கொண்டிருந்தால் எப்படி என்ற எண்ணம் பிறக்க வேண்டும். சுவாசம் உட்சென்று வெளிவருகிறதே அது நம்முடைய கட்டளையையா கேட்டு நிற்கிறது. இதயத்தை இயங்கச் செய்யும் சுவிட்ச் எதுவும் நம்மிடம் உள்ளதா? அப்படி இருந்தால் யாரும் ஹார்ட் அட்டாக்கில் சாக மாட்டோம். அப்போது இங்கு இருப்பது உன் விருப்பத்தினால் அல்ல என்று தெரிய வருகிறது.

 

பக்தி உனது அகக்கண்ணை திறக்க வேண்டும். முருகா என்றவுடன் ஆற்றொழுக்காய் கண்ணீர் கண்களிலிருந்து தாரை தாரையாக வழிய வேண்டும். உடம்பு புல்லரித்து மயிற்கால்கள் குத்திட்டு நிற்க வேண்டும். சகலத்தையும் அவனிடத்தில் ஒப்படைத்துவிடும் துணிவு வேண்டும். எல்லாம் அவன் செயல் என சும்மா இருந்துவிட வேண்டும். யோகம் நான்கு அவை கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம். சிவமாக நான்கு வழியிருக்கிறது. இறைவனை வணங்க வேண்டுமென்றால் அண்ணாந்து வானத்தைப் பார்த்துதானே தொழுகிறோம். உடலிலே ஏழு சக்கரங்கள் உள்ளது. முதுகுதண்டிற்கு கீழே உள்ள மூலாதாரம் மேலே ஸ்வாதிஷ்டானத்தைப் பார்க்கிறது ஸ்வாதிஷ்டானம் மேலே மணிப்பூரகத்தை பார்க்கிறது மணிப்பூரகம் மேலே அனாஹதத்தைப் பார்க்கிறது அனாஹதம் மேலே விசுக்தியைப் பார்க்கிறது விசுக்தி மேலே ஆக்ஞாவைப் பார்க்கிறது ஆக்ஞா மேலே சஹஸ்ரஹாரத்தை பார்க்கிறது. சஹஸ்ரஹாரத்தை ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலருடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள். கிழக்கில் பரிதி உதித்தவுடன் தாமரை மலரும். அதுபோலே சஹஸ்ரஹாரம் மேலே ப்ரம்மத்தைப் பார்க்கிறது. இப்போது தெரிந்திருக்கும் கடவுளென்றால் ஏன் மேலே பார்க்கிறோம் என்று.

 

தோல்வி கூட ஒருவனுக்கு குருவாய் அமைந்துவிடுகிறது. அதுவரை தன்னைக் கொம்பன் என்று நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு பேரிடி தலையில் விழுகிறது. வாழ்க்கை ஒரு கண்டிப்பான ஆசிரியன் பாடம் கற்றுக் கொடுத்துவிடும். ஒரு செயலில் முயற்சி கால் பங்கு விதி முக்கால் பங்கு. ரமணமகரிஷிக்கு புற்றுநோய் வந்தது. ஆத்மஞானிக்கு வரலாமா? சிவமாகிவிட்டவரை எப்படி சோதிக்க முடியும், கேள்வி எழுகிறதல்லவா? கொண்டு வந்த பிராரப்த கர்மத்தை இப்பிறவியிலேயே அனுபவித்து தீர்க்கவில்லையென்றால் மிச்சத்துக்காக மேலும் ஒருபிறவி எடுக்க வேண்டிவரும். உண்மையை உணர்ந்தவர்கள் மீண்டும் இந்த உலகுக்கு வர ஆசைப்படுவார்களா? கஷ்டம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது அவரவர் தகுதிக்கு ஏற்றபடி வருகிறது. ஏழைகளுக்கு ஒருவிதத்தில் பணக்காரனுக்கு வேறொரு விதத்தில். எல்லாம் சிவமென்ற நாயன்மார்களுக்கு தேடி வராத கஷ்டங்களா உன்னை வேரோடு அசைத்துப் பார்க்கிறது.

 

கஷ்டம் சிறுகல் அதை கண்ணுக்கு அருகே வைத்துப் பார்த்தால் பூதாகரமாகத்தான் தெரியும். கவலைப்படுவதால் உங்கள் உயரத்தை ஒரு அங்குலம் அளவாவது உயர்த்த முடியுமா என்ன? சாமானியர்களெல்லாம் பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழ்பவர்கள் தானே. உலகம் சிக்கலான இயந்திரம் மேற்கொண்டு ஏனய்யா நடத்துகிறீர்கள் என்று நம்மால் கேட்க முடியுமா? கேட்டவர்களுக்கு மட்டும் பதில் கிடைத்ததா என்ன? இங்கே நாம் என்ன சொல்கிறோம் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்போம் அங்கேயும் அதே கதைதான். உடலே பிச்சைப் பாத்திரம் தானே. உலகத்திலேயே பெரிய சுடுகாடு வயிறு தானே. போதும் என்ற திருப்தி வருகிறதா அதற்கு. எல்லாவற்றையும் எரித்துவிட்டு இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறதே. உலகம் யாரையும் சார்ந்து இல்லை. பேரரசர்களும், மகாஞானிகளும் கூட இறந்து தான் போனார்கள். அதனால் உலகம் ஸ்தம்பித்தா நின்றுவிட்டது. இதோ சூரியன் உதித்ததும் காரியங்கள் அததுபாட்டுக்கு நடக்கத்தானே செய்கிறது.

 

நீ பெரியவனா நான் பெரியவனா? எங்க சாமி பெருசா உங்க சாமி பெருசா? உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரர்ன்னு இருக்கலாம். உலகத்திலேயே நம்பர் ஒன் கடவுள்ன்னு இருக்க முடியுமா? கடவுளையும் பணத்தை வைச்சா எடை போடுறது. பசிக்கு சோறு போடுறவன் கடவுளாவே ஆகிவிடுகிறான். உண்டியலில் காசு போடுறவன் கடைசி வரைக்கும் பிச்சைக்காரனாத்தான் இருந்தாக வேண்டும். பிரதிபலன் எதிர்பாராம சோறு போடுறவனுக்கும் பிரதிபலன் எதிர்பார்த்து உண்டியலில் காசு போடுகிறவனுக்கும் வித்தியாசம் இருக்குல்ல. சைவம்ங்கிறது ஒரு தத்துவம், வைணவம்ங்கிறது ஒரு தத்துவம். சைவம் இரண்டல்லாதது என்கிறது எல்லோருமே இறைவன்டா என்கிறது வைணவம் அப்படியில்ல இரண்டானது என்பதில் உறுதியாய் நிற்கிறது. நீ சேவகன் கடவுள் பரமாத்மா ஜீவன்களை ஆட்சி பண்ணுகிற ஒருவர் இருக்கார் என்று அவதாரக்கதைகளை பேசுகிறது. அவருவமோ உருவமோ கடவுள் ஒருவராகத்தானே இருக்க வேண்டும். கிழக்கு திசைக்கு ஒரு கடவுள் மேற்கு திசைக்கு ஒரு கடவுள்ன்னு இருக்க சாத்தியமே இல்லை அல்லவா? அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான சக்தி நம்மை காலத்திலும், இடத்திலும் வைத்துப் பார்க்கிறது ஏன் இந்த திருவிளையாடல் என்று யாருக்குத் தெரியும்.

 

படிப்போமோ, வேலை கிடைக்குமோ, கல்யாணம் நடக்குமோ, குழந்தை பிறக்குமோ தெரியாது தான், ஆனாலும் நமக்கு நடக்குமென்றே நினைப்போம்.  மரணம் சர்வநிச்சயம் என்றாலும் நமக்கு விதிவிலக்கு உண்டென்று நினைத்துக் கொண்டிருப்போம். இறைவனைத் தான் எல்லோருக்கும் தெரிகிறதே. ஈசனுக்கு உன்னைத் தெரிகிறதா என்று பார். பண்டிகையன்று ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். பண்ணையார் வீட்டிலும், ஜமீன்தார் வீட்டிலும் புத்தம்புதிய ஆடைகள், பலகார வகைகள் விதவிதமாக இருக்கும். ஈசன் பண்ணையார் வீட்டு கதவைத்தட்டுவான் என்றா நினைக்கிறீர்கள். ஊருக்கு அவர்கள் பெரியவனாக இருக்கலாம் உள்ளத்தில் சிறியவர்களாயிற்றே. ஏழைவீட்டு கதவைத்தான் தட்டுவான் அதுதான் அன்பு அதுதான் சிவம். அவன் முக்காலத்துக்கும் அதாவது பிறந்த பிறவியிலும், வாழ்கின்ற பிறவியிலும், பிறக்கப்போகும் பிறவியிலும் பொறுப்பை எடுத்துக் கொண்டால் போதாதா.முருகன் ஆறுமுகன் பன்னிருகரத்தவன் திருவடி இரண்டுதான் ஏன் தெரியுமா? பற்றுவதற்கு நமக்கு இருக்கும் கைகள் இரண்டுதானே அதுதான் காரணம்.

 

நாடிதளரும் போதுதான் நாளும், கோளும் புரிய வருகிறது. கடன் கொடுத்தவன் கிட்டி போடுகிறான் உறவையும், நிலையையும் சொல்லி புலம்பினால் விட்டுவிடுவானா? நல்லவனுக்கு நாக்கு சுத்தமாக இருக்க வேண்டும். நம் நாட்டில் பாருங்கள் வல்லவன் என்று சொல்லி பீற்றிக் கொள்கிறார்களே அவர்கள் வாக்கு சுத்தமாக இருக்கிறதா? சுட்டிக்காட்டினால் அரசியலிலும், வியாபாரத்திலும் பொய் பேசினால் தான் போஜனமாகும் என்பார்கள். படிப்பை முடிக்கிற வரைக்கும் நீ முத்துசாமியின் பிள்ளையா இருக்கலாம் ஒண்ணும் தப்பில்லை. ஐம்பது வயது வரைக்கும் முத்துசாமியோட பிள்ளையாவே இருந்தா நீ பிறந்திருக்கவே வேண்டாம். தோன்றின் புகழோடு தோன்றுக என்றான் வள்ளுவன். அப்பன் பெயரை காப்பாத்திட்டான் என்பார்கள். ஒருவயசு வரைதான் நீ முத்துசாமியோட பிள்ளை, இன்னாருடைய அப்பான்னு சொல்லி அவரை சுட்டிக்காட்டும்போதுதான் எம்பிள்ளை தலையெடுத்துட்டான் பிழைச்சிக்குவான் அப்படின்னு அவர் கம்பீரமா தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் நடப்பார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் வள்ளுவனே சொல்லி இருக்கானே வேறு யார் சொல்லணும்.

 

பாதம் தேய்ந்து போக கோயில் கோயிலா படிஏறுனேனே அப்பா முருகப்பா நல்ல பாதை ஒன்றை காட்டக்கூடாதா என பக்தன் வேண்டித் தொழுது நிற்கிறான். கருவறையிலிருந்து அசரீரி கேட்கிறது வெயிலாக இருந்தால் நிழல் தருவேன், இருளாக இருந்தால் ஒளி தருவேன் என்று. போய்க் கொண்டே இருக்கிறான் சொன்னாரே செய்தாரா என திரும்பிப் பார்க்கிறான். இரண்டு காலடி அவனைத் தொடர்ந்து வருகிறது சரி சொன்ன மாதிரியே நம்மை தொடர்ந்து வந்து காவந்து பண்ணுகிறார் என சமாதானம் அடைகிறான். அன்று வியாபாரம் படுத்துவிட்டது கையில நயாபைசா இல்லை பிள்ளைக்கு  உடம்புக்கு நோவு என்ன பண்ணுவது தலைசுற்றுகிறது திரும்பிப் பார்க்கிறான் தொடர்ந்து வந்த காலடியைக் காணோம். என்ன கஷ்டகாலத்துல இப்படி நிர்கதியா விட்டுட்டுப் போயிட்டாரே என கோயிலுக்குள் காலடி எடுத்து வைக்கிறான். அசரீரி கேட்கிறது பக்தா மனக்கலக்கத்தில் மயக்கமுற்றாய் வீழ்ந்துவிடாமல் உன்னைத் தாங்கிய காலடிகள் தமதே என்று. அது தான் இறைவன்.

 

முருகன் அருணகிரிநாதரை சும்மா இரு என்கிறான். சும்மா இரு என்றால் எதையும் செய்யாதே சிலை போலிரு என்றா அர்த்தம். மனம் சும்மா இருக்க வேண்டும். செய்யும் வேலையில் ஊன்றி இருக்க வேண்டும் காரியத்தை விட்டுவிட்டு வேறெங்கோ ஓடக்கூடாது. அப்போதுதான் புறத்தே ஓடும் மனம் அகத்தே திரும்பிப் பார்க்கும். ஜீவன் அறிவை நாடும். ஞானம் எங்கோ இல்லை நீ அலைந்து திரிவதற்கு உன் மனதில் தான் புதைந்திருக்கிறது. திரை விலக வேண்டும். திரைவிலக கதவைத் தட்ட வேண்டும். மகிழ்ச்சி கொண்டாட வைக்குமே தவிர உன்னை உள்ளுக்குள் திரும்ப வைக்காது. அதற்குத்தான் துன்பம். துன்பம் தரும் பரிசே ஞானம். எங்கேயாவது செல்வச்சீமான்கள் ஞானப் பாதையில் நுழைகிறார்களா? பசியை உணராதவனுக்கு உணவின் அருமை தெரியாது. கொடுத்துக் கெடுப்பவனும் அவன் தான். மன்னன்  எழுப்பிய கற்கோயிலை விட்டுவிட்டு பூசலார் எழுப்பிய மனக்கோயிலுக்குள் எழுந்தருளியவன்தானே சிவன். தொழுநோய் கண்ட அருணகிரிநாதரின் உடலை முருகன் தன் பொற்கரங்களால் தாங்கிப் பிடிக்கவில்லையா. வந்துபோகும் இடத்தில்தான் பெண்ணையும், பொன்னையும், மண்ணையும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். 

 

ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஆற்றல் இருக்கிறது, சக்தி இருக்கிறது. விதைக்கு மண்ணைப் பிளந்து வெளிவரும் சக்தி எங்கிருந்து வந்தது. காக்கை போல் நம்மால் பறக்க முடியுமா? தவளையைப் போல் நம்மால் தண்ணீரிலேயே கிடக்க முடியுமா? மனிதன் வானிலையை கணிப்பான் பூகம்பத்தை கணிப்பான் அவனால் இயற்கையை கணிக்கத்தான் முடியும். பூலோகத்தின் சாதாரண பிரஜை தான் மனிதன் பூமியையே சொந்தம் கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டான். கடவுள் எங்கேயும் இருப்பான் என்றால் கல்லிலேயும் இருப்பான் அது தானே தாத்பரியம். நீ இரு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குகிறாயே அது வெளியே இருக்கும் எதையும் அல்ல உன் ஆத்மாவைத்தான் நீ வணங்குகிறாய். பக்தி, ஞானம் எல்லாம் ஆத்மாவுக்கும் உனக்குமான திரையை விலக்கத்தான். வணங்கப்பட வேண்டியது ஆன்மாவே தவிர வேறெந்த தெய்வமும் அல்ல. எல்லா அறிவும் ஆத்மனை அறிந்து கொண்டால் வந்துவிடும். மனிதனால் எல்லாமே நடத்திக்காட்ட முடியாது. எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடக்கும்.

 

சூழ்நிலை கர்மவினையாலேயே அமைகிறது. நாம் நல்ல நேரம் பார்த்து அலுவலகம் கிளம்புகிறோம் எதிர்ப்படுபவன் யாரென்று விதிதானே நிர்ணயிக்கிறது. வாழ்க்கை ஒரு வாய்ப்பு விதி உன்னை தெருவில் நிறுத்தும் முன்பு அதை நீ புரிந்து கொள்ள வேண்டும். நமக்கான பொக்கிஷத்தை பூலோகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் அதற்கப்புறம் இறைவன் நம்மை அனுப்புகிறான். பொக்கிஷம் அடங்கிய பெட்டியை திறப்பதற்கான சாவி நம்மிடமே இருக்கிறது. ஆனால் இவனென்ன செய்கிறான் தன் உயரம் தனக்குத் தெரியும் என்கிற மாதிரி தனக்குக் கிடைத்ததை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே. இவன் அடுத்தவன் பெட்டியில் என்ன இருக்கும் என்பதிலேயே கண்ணாய் இருக்கிறான். எதிர்த்த வீட்டுக்காரனின் பையன் டாக்டருக்கு படிக்கிறாங்கிறத்துக்காக பனிரெண்டாம் வகுப்பு பாஸாகவே ததிகினதோம் போட்ட பையனைக் கொண்டுபோய் கோட்டையும், ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டி உட்காரென்றால் என்னாகும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. பிறத்தியாருக்காகவே வாழ்கின்றதை எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறார்களோ?

 

நாயொன்று கட்டுக்காவலை மீறி அரண்மனைக்குள் நுழைந்துவிட்டது. கண்ணாடி மாளிகையில் நாயின் பிம்பம் ஆயிரமாயிரமாய் பிரதிபலித்தது. தன் இனத்தைப் பார்த்தால் குரைக்கும் நாய்தானே குரைக்க ஆரம்பித்தது. செத்து விழும்வரை குரைத்துக் கொண்டிருந்தது. சற்று குரைப்பதை நிறுத்தி என்னவாகிறது என்று அக்கம்பக்கம் கவனித்து இருக்கலாம். நாய்க்கு அது தோன்றாது, நமக்கும் தான். உலகத்தில் பிறரிடத்தில் நீங்கள் அன்பு காட்டினால் அன்பு கிடைக்கும். கருணை காட்டினால் கருணை கிடைக்கும். ஒருவரை அலட்சியப்படுத்திவிட்டு அன்பை எதிர்பார்க்கக் கூடாது. எவ்வளவோ பேர் சாகிறார்கள் எல்லோரையுமா உலகம் ஞாபகம் வைத்துக் கொள்கிறது. இறந்தவர்களுடைய சொந்தபந்தங்களே பத்துநாளில் அவரை தூக்கியெறிந்துவிட்டு பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறார்களே. எவ்வளவு இடர் வந்தாலும் உண்மையின் பாதையிலிருந்து விலகிக் கொள்ளாதவர்களையே உலகம் நினைத்துப் பார்க்கிறது. இப்படியும் ஒருவன் வாழ்ந்தானா என அவனுடைய சரித்திரத்தை புரட்டிப் பார்க்கிறது.

 

கடவுளிடம் நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நமக்கு வயது முப்பது என்று வைத்துக் கொள்வோம். முப்பது வருடங்களாக உலகில் தங்குவதற்கு இடம் கொடுத்தான் அல்லவா? முப்பபது வருடங்களாக உயிர் வாழ்வதற்கு தொடர்ந்து உணவு வழங்கி வந்துள்ளான் அல்லவா? மூன்று நாள் உணவு கிடைக்கவில்லை என்பதற்காக முப்பது வருடங்களாக அன்ன ஆகாரம் கொடுத்து இருக்க இடம் கொடுத்து காத்தவனை ஒரே நாளில் தூக்கியெறிந்துவிடுவதா? ஒரு கதையுண்டு அந்த ஊரில் வாழ்ந்த பெரியவர் உயர்ரக குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். அது காணாமல் போனது. ஊர்வாசிகள் நாலைந்து பேர் பெரியவர் வீட்டுக்கு வந்து என்ன நல்லகுதிரையாயிற்றே இப்படி காணாமல் போய்விட்டதே என ஆறுதல் கூறினார்கள். அப்பெரியவர் அலட்டிக்கொள்ளாமல் எல்லாம் அவன் செயல் என்றார். அடுத்த நாள் அந்தக் குதிரை ராஜ வம்ச குதிரையொன்றை கூட்டிக் கொண்டு வந்தது. ஊர்வாசிகள் திரும்பவும் கூடி வந்து பெரியவருக்கு அதிர்ஷ்டம் என்றார்கள். திரும்பவும் அந்தப் பெரியவர் எல்லாம் அவன் செயல் என்று அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்.

 

அடுத்த நாள் அந்த ராஜ வம்ச குதிரை மீதேறி சவாரி செய்த போது தவறி விழுந்து அந்த பெரியவருடைய மகன் வலது காலை உடைத்துக் கொண்டான். ஊர்வாசிகள் கூடி வந்து இப்படி ஆகிவிட்டதே என்றார்கள். அந்தப் பெரியவரோ முகத்தில் சலனமில்லாமல் எல்லாம் அவன் செயல் என்றார். இப்படியாய் இருக்க அந்த நாட்டின் மீது பக்கத்து நாடு போர் தொடுக்க வந்தது. நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் படையில் சேரும்படி அரசர் உத்தரவிட்டார். அந்த ஊரிலுள்ள இளைஞர்கள் அனைவரும் போர் முனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். காலில் அடிபட்டு பின்னமானதால் பெரியவருடைய மகனை படையில் சேர்த்துக் கொள்ளவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது. இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு எல்லாம் அவன் செயல் என்று. உலகில் எல்லா செயல்களும் காரண காரியத்தோடுதான் நடக்கிறது. எது நமக்கு சாதகம் எது நமக்கு பாதகம் என்று நம்மால் முடிவு செய்ய இயலாது. ரயிலில் செல்லும்போது பாரத்தை ஏன் தூக்கி தலையில் வைத்துக் கொள்கிறாய் இறக்கி வைத்துவிடு.

 

ரமணமகரிஷியின் சுலோகத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன்

“கிடைக்கும் முன் கடுகேயானாலும்

மலையாக்கிக் காண்பித்து

கிடைத்த பின் மலையேயானாலும்

கடுகாக்கிக் காண்பிக்கும் – மடமனம்”

ஆசைவைப்போம், கனவு காண்போம். அதைப் பற்றியே கற்பனை செய்வோம். இருபத்துநான்குமணி நேரமும் அதன் நினைப்பாகவே இருப்போம். ஆசைப்பட்டது கிடைக்க உயிரை இழக்கக்கூட தயாராவோம். எதிர்பார்த்தது கிடைத்துவிட்டால் மனம் அலட்சியமாக அதை புறந்தள்ளிவிட்டு அடுத்ததை நாடும். அதுதான் மடமனம். ஐம்புலன்களும் மனதை இழுக்கும். கண் பார் பார் என்கும் காது கேள் கேள் என்கும் நாசி முகர் முகர் என்கும் இப்படி புலன்கள் வழியே மனம் ஓடிக்கொண்டிருந்தால், சும்மா இருக்காமல் ருசிகண்ட பூனையாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தால் அதற்கு கடிவாளம் போட்டு கண்களை அலையவிடாமல் நேர்கொண்ட பார்வையாக அமைத்துக் கொள்வது இந்தக் காலகட்டத்துக்கு ரொம்ப நல்லது.

 

ஸத்யம், ஞானம், அனந்தம் – ப்ரம்மம். அதாவது எது சத்தியமாகவும் அறிவு சொரூபமாகவும் எல்லையற்றதாகவும் இருக்கிறதோ அது ப்ரம்மம். வேதங்கள், உபநிடதங்கள் எச்சிலாக்கப்பட்டு விட்டன. எச்சிலாக்கப்படாத ஒரு விஷயம் ப்ரம்மம். சர்க்கரை மலையிலிருந்து எறும்பு ஒரு துணுக்கைத்தான் எடுத்துவர முடியும். சமுத்திரத்தின் ஜலத்தினை கையிலெடுத்து இதுதான் கடலென்றால் அது எவ்வுளவு பொய்யோ அல்லது எவ்வளவு மெய்யோ அதுதான் ப்ரம்மம். இங்கிருப்பது ஒரேயொரு நான் மட்டுமே. நாமெல்லாம் அதாவது பிரபஞ்சமே அவனுடல். ஆகாயமே வெட்ட வெளியே மீனாகவும், விலங்காகவும், மனிதனாகவும் உருவெடுக்கிறது. காலாகாலத்துக்கு என்னென்ன தேவையோ, எதை வெளிக்கொண்டு வரவேண்டுமோ அதனை தானே நடத்துகிறது. நாமெல்லாம் அதன் கருவிகள். நம்மை அது உபயோகப்படுத்திக் கொள்கிறது.

 

ஒரு செயலைச் செய்வதும் செய்யாமலிருப்பதும் நம் வசம் இல்லை. ஆகாசம் நம்மை உந்தித் தள்ளுகிறது. இறை இறங்கி வந்தது அது இராமன். மனிதன் கடவுளாக மேலேறிப்போனான் அது புத்தன். நான் யார்? இந்தக் கேள்வியை கோள்களும், நட்சத்திரங்களும், மலையும், மரமும் தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறது. மூச்சு இருக்கும் வரைதான் பேச்சு. சங்கரன் மாயை என்கிறானே உறக்கத்தில் கனவு காண்கிறோம் சரி. வாழ்வதாகவும் கனவு காண்கிறோமா? பொண்டாட்டியும் பிள்ளைகளும் அறுபது வருட கனவுதானா? வாலிபம் போய்விட்டால் உள்ளுக்குள் அலாரம் அடிக்கிறதே. பாதி கிணறு கடந்தாச்சு, தலை நரைத்துப் போச்சு முக்கால் கிழம் ஆயாச்சி, கண்பார்வை மங்குகிறது, தலை சுற்றுகிறது எமலோகத்தில் சித்திரகுப்தன் தூசுதட்டி நம் ஃபைலை எடுத்துவிட்டான் அதான். ஈசனின் கருணை உள்ளம் தானே மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவித்தன்மையை அளித்தது. எல்லோருக்கும் அவரவர்கள் நல்லவர்கள் தான் நல்முத்துக்கள் தான். உடல் நடுக்கூடத்தில் கிடக்க உயிரை அழைத்துக்போக எமகிங்கரர்கள் வருகிறார்களா சிவகணங்கள் வருகின்றனவா என்பதிலேயே தெரிந்துவிடாதா தான் வாழ்ந்த வாழ்க்கை எப்படிபட்டதென்று. நாம் தான் சொல்லிக் கொள்கிறோம் சிவபதம் அடைந்தார் என்று. என்ன எல்லா ஜீவனுமா சிவபதம் அடைகின்றன!

எனக்கு ஒரு கனவு உண்டு – மார்டின் லூதர் கிங்

 


இந்த இடத்தில் கொந்தளிக்கும் மக்கள் கடல் முன்பு நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். ஏட்டளவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நூறாண்டுகள் கடந்துவிட்டது. கிடைத்ததா நம் இன மக்களுக்கு உரிமை. கறுப்பினத்தவரை அடிமையாகக் கருதும் வெள்ளை இனத்தவரின் மனப்போக்கு இன்னும் மாறவில்லை. நிறத்தால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றே அவர்கள்நினைக்கிறார்கள். வெள்ளையர்கள் மட்டும் – என எழுதப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையே அதற்கு உதாரணம். எப்போதும் ஒரு சாரார் சார்பாகவே பூமி சுழலாது. போராட்டம் என்று நாம் வன்முறையை கையில் எடுத்துவிடக் கூடாது. மகாத்மா காந்தி அகிம்சையைக் கைகொண்டதினால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆயுதம் ஏந்துவது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் கொடுக்காது. வெள்ளையினத்தவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்துபவர்கள் போராட்டத்தை வேறு வழியில் திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

 

எல்லோரும் கடவுளின் புத்திரர்கள் இதில் நிறம் எங்கிருந்து வந்தது. நாடு, மொழி, இனம் என்று பிரிவினை காட்டுவதைவிட தோல் நிறத்தால் ஒருவன் உயர்ந்தவன் என்பதை என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்னாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒருவனின் மதிப்பு குணத்தால் தான் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர நிறத்தால் அல்ல. ஆள்வோர்கள் கூட கறுப்பினத்தவரை குற்றவாளியாக பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும். பிறப்பால் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று யாரும் இங்கு மார்தட்டிக் கொள்ள முடியாது. எல்லோரும் அன்னையின் வயிற்றில் பத்து மாதம் இருந்துதான் பிறக்கிறோம். இந்த தேசத்தின் வளர்ச்சியில் கறுப்பினத்தவர்களுக்கு பங்கு இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு அரசாங்கமானது நிறப்பாகுபாட்டை முன்வைத்து ஒரு இனத்தின் மீதே அக்கறை இல்லாமல் நடந்து கொள்டால் நாங்கள் என்ன செய்வது.

 

அமெரிக்கா சுதந்திரமடைந்த போது இந்த தேசம் வெள்ளையர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றா அரசாணை வெளியிட்டீர்கள். அமெரிக்க விடுதலை போரில் கறுப்பினத்தவர்கள் இரத்தம் சிந்தவில்லையா என்ன? எங்களை ஆள்வோர்களை நாங்கள் தீர்மானிக்கக் கூடாது என்பதால் தானே கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையை நீங்கள் வழங்கவில்லை. அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். தோட்டாக்களுக்கு பயந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. செய் அல்லது செத்து மடி இதுவே எங்கள் முடிவு. எப்போது கடவுள் வானத்திலிருந்து இறங்கி வந்து சொன்னார் வெள்ளையர் மட்டுமே எனது குமாரரர்கள் என்று. வெள்ளை இனத்தவரின் கடவுள் கருப்புத் தோலைக் கொண்டிருந்தால் உடனே எல்லா வெள்ளைஇனத்தாரும் சேர்ந்து அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வீர்களா? சிறகு இருப்பதே பறப்பதற்காகத்தானே. வானம் விசாலமானது தனிப்பட்டவர்களுக்கு மட்டும் என இந்த உலகை யாரும் சொந்த கொண்டாட முடியாது. நான் இப்போது இங்கு நின்று பேசுவது வெள்ளை மாளிகையின் வேர்களையே அசைத்துப் பார்க்கும்.

 

நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் ஒடுக்கப்பட்ட இனம் ஒருநாள் விஸ்வரூபம் எடுக்குமென்று. குட்ட குட்டக் குனிவது இனி நடக்காது. நாங்கள் இந்த அமெரிக்க நாட்டின் பங்குதாரர்கள். எங்களது உரிமைகளை நாங்கள் போராடிப் பெறுவோம். ஒரு சிறுதீப்பொறி காட்டையே அழித்துவிடப்போகிறது. உரிமையைப் பெறும்வரை இந்தப் போராட்டம் ஓயாது. மழையைத் தருவதே கருமேகங்கள் தானே. கருவண்ணம் என்பதற்காக இரவு வானத்தை வெறுத்துவிடுவோமா? சட்டம் எல்லா மக்களையும் சமமாக நடத்து வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளிடம் கறுப்பின வெறுப்பை நஞ்சாக ஊட்டி வளர்க்கக் கூடாது. கோஷமிட்டுவிட்டு அடங்கிப் போய்விடுவார்கள் என எண்ணாதீர்கள். அநீதிக்கு எதிரான இந்தப் போர் என்னோடு முடியப்போவதில்லை. வாழ்ந்தால்  ஆறரை கோடி முழுமையும் வாழ்வோம் வீழில் ஆறரைகோடி முழுமையும் வீழ்வோம். கனன்று  கொண்டிருக்கும் எரிமலை ஒரு நாள் நெருப்பை கக்கியே தீரும்.

 

கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காக தூக்குகயிற்றை முத்தமிடவும் நான் தயாராக இருக்கிறேன். அலைகளை தடுத்துவிடலாம் ஆழிப்பேரலையை. எனக்கு ஒரு கனவு உண்டு. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சர்ச்களில் வெள்ளைக்காரர்களுக்கு சரிசமமாக கறுப்பினத்தவரும் அமரும் நிலை வரும். ஆள்வோர்களைத் தீர்மானிக்கும் வாக்குரிமை எங்களுக்கு கிடைக்கும். வல்லாதிக்க அமெரிக்க நாட்டினை ஆள்வதற்கு ஒரு கறுப்பினத்தவர் புறப்பட்டு வருவார். இன்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக நான் விடுக்கும் இவ்வுரை ஒவ்வொரு போராட்டக் குழுவுக்கும் வேதமாகும். எனக்கு ஒரு கனவு உண்டு. ப்ராட்டஸ்டாண்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே சகோதரத்துவம் மலருமென்று. எனக்கு ஒரு கனவு உண்டு. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பினத்தவர்கள் மீது காட்டும் வெறுப்பு ஒருநாள் அன்பாக மாறுமென்று. அமெரிக்க நாட்டின் முதுகெலும்பாக கறுப்பினத்தவர்கள் வரும் காலங்களில் கருதப்படுவார்களென்று. வெள்ளை இனத்தவர்கள்  கறுப்பினத்தவர்களோடு கைகுலுக்க தயக்கம் காட்ட மாட்டார்களென்று. எனக்கு ஒரு கனவு உண்டு. இந்த உலகில் கறுப்பினத்தவரை இரட்சிக்க ஒரு தேவதூதன் தோன்றுவானென்று.

 

வருங்காலங்களில் கறுப்பினத்தவர்களிடையே வரலாற்று நாயகர்கள்  உருவாகி வருவார்களென்று. மகாத்மா காந்தி போல நாமும் அகிம்சையை ஆயுதமாக்கிக் கொள்வோம். துப்பாக்கிகளுக்கு துப்பாக்கிகளாலேயே பதில் சொல்லும் தேசம் அகிம்சைக்கு தலைவணங்கியே தீரும். நான் இங்கு விதைத்தது வருங்காலங்களில் விருட்சமாகும். சிக்கிமுக்கி கற்களில் நெருப்புப்பொறி ஒழிந்துள்ளது என நான் நிரூபித்துவிட்டேன். நாளை நாடுமுழுவதும் சுதந்திரத்தீ பற்றி எரியப்போகிறது. எனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எல்லா கறுப்பினத்தவர்களும் வீதியில் இறங்கி போராடப்போகிறார்கள். இன்று இங்கு நான் காணும் எழுச்சி நாளைய அமெரிக்க நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடும். எனது கனவு நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Sunday, February 21, 2021

பாவமன்னிப்பு

 


“ஹலோ ஃபாதர் ஜெயராஜ் பேசுறேன்.”

 

“ஓ ஜீஸஸ்! இப்பதான் உங்களபத்தி நினைச்சிட்டு இருந்தேன் நீங்களே கால் பண்ணிட்டீங்க. என்ன விஷயம் ஃபாதர்” என்றார் தொழிலதிபர் டேவிட் தணிகாசலம்.

 

“ஒண்ணுமில்லை. உங்கள சந்திக்கணும்னு ராயப்பன்னு ஒருத்தர் பிரியப்படுறாரு.”

 

“என்ன பேர் சொன்னீங்க ஃபாதர்?”

 

“ராயப்பன். உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

 

“ம். இப்பதான் ஞாபகத்துக்கு வருது. வெயிட் பண்ணச் சொல்லுங்க இன்னும் அரைமணி நேரத்துல வர்றேன்.”

 

டேவிட்டின் கண்கள் சிவந்தன. ‘ராயப்பன் ராஸ்கல் ராயப்பன் உன்னை எமலோகத்துக்கு அனுப்புறதுதான் என் முதல் வேலை.’ கைத்துப்பாக்கியில் தோட்டா நிரப்பப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டு விறுவிறுவென வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் நோக்கி விரைந்தார் டேவிட். கார் சாலையில் சீறிப்பாய்ந்தது.

 

‘ப்ளடி இடியட் ஃப்யூல் பழைய டேவிட்டா என்னை நினைச்சானா காசு, பணம், லொட்டு லொசுக்குன்னு எல்லாத்தையும் பாத்தாச்சி அப்ப என்னைய புழுவா பூட்ஸ் கால்ல மிதிச்சிபுட்டு இப்ப பாம்பானோன்ன மகுடி ஊதலாம்னு பாக்குறானா ஸ்டுப்பிட் ஃபெல்லோ. ராயப்பன்னு அவன் பேரை வாயால சொல்லக்கூட அருவருப்பா இருக்கு. ராயப்பா உன்னோட விதிதான் உன்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கு.’ அவரது வலது கையால் பிஸ்டலை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

 

கார் ஃபாதர் வீட்டின் முன் நின்றது. கார் சத்தம் கேட்டதும் ஃபாதர் ஜெயராஜ் வெளியே வந்து டேவிட்டை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

 

ஃபாதர் டேவிட்டிடம் “நீங்கள் சம்மதித்ததால் தான் அவரை வெயிட் பண்ணச் சொன்னேன். இந்த அறையில தான் இருக்காரு. நீங்கள் சந்தித்துவிட்டு வாருங்கள் நாம் பிறகு பேசுவோம்” என்றார்.

 

டேவிட் அறைக் கதவைத் திறந்ததும் ராயப்பன் சோபாவிலிருந்து எழுந்து கொண்டான். ‘ஸிட் ஸிட்’ என்று சொல்லிக்கொண்டே எதிரே உள்ள சோபாவில் டேவிட் அமர்ந்தார்.

 

கால்மேல் கால்போட்டபடி ராயப்பனை மேலும் கீழுமாக இரண்டு தடவை பார்த்தார், “இத்தனை வருஷம் கழிச்சி தேவையில்லாம தேடி வந்திருக்க மாட்டேன்னு தெரியும். இப்ப என்னோட ஸ்டேடஸே வேற, என்னை உன்னால விலைபேச முடியாது. இல்ல நான் செஞ்சது பாவம்னு ஞானோதயம் வந்திடுச்சின்னு பிச்சை கேட்டு வந்திருக்கியா?” என்றார் வெண்தாடியை வருடியபடி.

 

ராயப்பன் கண்களை தாழ்த்திக் கொண்டு “மிஸ்டர் டேவிட் உங்க பேரைக் கெடுக்கணும்னு நான் விரும்பலை. நான் செஞ்ச தவறுக்கு பிராயச்சித்தம் தேடித்தான் வந்திருக்கேன். நான் ஒரு பாவி டேவிட்.”

 

“நாம சந்திச்சி இருபத்தைந்து வருஷம் இருக்குமா? இப்ப ஞானம் பொறந்திருச்சின்னு வந்து நின்னா நான் நம்பணும் இல்ல.”

 

டேவிட்டின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. நிதானமாக கோட்டுக்கு உள்ளே இருந்த செல்லை எடுத்து காதில் வைத்தார். “ஹலோ செபஸ்டியன் டுடே இஸ் யூவர் டே. அப்பா ப்ளாங்க் செக்கை டேபிள்ல உன் போட்டோவுக்கு கீழ வைச்சிருக்கேன். ரேஸ்ல ஜெயிக்கிற குதிரைமேல பணத்தைக் கட்டுறதுதான் புத்திசாலித்தனம். இதெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு ஃபேமிலி மேன் ஆயிடுன்னா கேட்க மாட்டேங்கிற” என்று பேசிவிட்டு டேவிட் போனை கோட்டுக்கு உள்ளே வைத்துக் கொண்டார்.

 

“டேவிட் இது உன் மகன்தானே, படர்றத்துக்கு கொம்பு கிடைச்சதும் எங்களையெல்லாம் மறந்துட்ட டேவிட்.”

 

“எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கமுடியாது ராயப்பன்.”

 

“நீ பழைய டேவிட்டா இருந்தேன்னா கமலாவைப் பத்திதான் முதல்ல கேட்டிருப்ப.”

 

“ஓ மை காட்! கமலா இன்னும் அந்தச் சிலுவையை என்னால் இறக்கி வைக்க முடியவில்லையே, கமலா உனக்கு முன் நானொரு குற்றவாளி. என் தரப்பை எதைச் சொல்லி நியாயப்படுத்துவேன் நான்.”

 

“என்னை துரோகி என்கிறாயே கமலா அப்பாவிடம் ஒருலட்சம் வாங்கும்போது உன் மனசாட்சிக்கு என்ன பதில் சொன்னாய் டேவிட்.”

 

“நான் கையாலாகதவன் என் தாயைக் காப்பாற்ற கை நீட்டி வாங்கிக் கொள்வதைவிட வேறு வழி தெரியவில்லை எனக்கு.”

 

“தாயா, கமலாவா என்று வரும்போது நீ தாயைத் தானே தேர்ந்தெடுத்தாய். கமலாவை நட்டாற்றில் விட்டுவிட்டாய் அல்லவா? உன்னைப் போல் மனதுக்கு ஒருத்தி, மஞ்சத்துக்கு வேறொருத்தி என கமலாவும் வாழ்ந்துவிடுவாள் என்று தானே நீ நினைத்தாய் டேவிட்.”

 

“ஓ நோ! ஆற்றைக் கடக்க உதவிய தோணியை மறந்துவிட்டேன்.”

 

“அது என்ன அவ்வளவு ஈஸியா சொல்லிட்ட டேவிட். சமுதாயத்தில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?”

 

“அப்படியென்றால் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸும் நானும் ஒன்றுதான். நியாயத்தீர்ப்பு நாளில் எப்படி அந்தக் கேள்வியை எதிர்கொள்வேன்.”

 

“உன்னை நியாந்தீர்க்க வேண்டியது இயேசு அல்ல கமலா தான். கமலாவின் இடத்தில் வேறொருத்தியை வைத்து உன்னால் பார்க்க முடிந்து இருக்கிறது. ஆனால் உன் இடத்தில் வேறொருவனை வைத்து கமலாவால் பார்க்க முடியவில்லை. உனக்கு காதல் ஒரு விளையாட்டு அவளுக்கு அதுதான் வாழ்க்கை.”

 

“அதை நீ சொல்லாதே.”

 

“நான் கமலா அப்பா தந்த பணத்தை பெட்டியில் எடுத்து வந்தபோது எதையும் யோசிக்காமல் வாங்கிய கல்நெஞ்சக்காரனின் கைகள் தானே உன்னுடையது டேவிட்.”

 

“பாவக்கறை படிந்தவை இந்தக் கைகள். அப்போது தன்னலத்தைப் பற்றியே யோசித்தது எனது புத்தி. உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சாத்தானை விழிக்கச் செய்துவிட்டேன். கல்லறைக்குப் போகும்வரை எனக்கு இவ்வுலகில் நிம்மதி இருக்காது.”

 

“நீ விளையாடியது ஒரு பெண்ணோட வாழ்க்கையில். பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லிக் கேட்டதில்லையா? கமலாவை ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டு பெரிய உத்தமன் மாதிரி பேசுகிறாய்?”

 

“காதலித்த போது என்விரல் நகம் கூட அவள்மீது பட்டதில்லை தெரியுமா? இந்த நாடகத்தில் உனக்கு பங்கில்லை என்று மீன் மாதிரி நழுவப் பார்க்காதே. பணத்துக்காக காதலை விலைபேசிவிட்டேன் என்கின்றாயே அன்று திட்டமிட்டு என்னுடைய பலவீனம் எதுவென்று தெரிந்துதானே அடித்தீர்கள்.”

 

“நீ வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டாய் எனத் தெரிய வந்தால் கமலா என்ன நினைப்பாள் என்று யோசித்து பார்த்தாயா?”

 

“அப்போது எதுவும் என் கையில் இல்லை. அம்மா இறக்கும்போது ஸ்டெல்லாவை என் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு போய்விட்டாள் நான் என்ன செய்வது.”

 

“உன் கோழைத்தனத்துக்கு உன் அம்மாவைக் காரணம்காட்டி தப்பிக்கப் பார்க்காதே.”

 

“யெஸ் ஐயம் புல்ஸிட். செய்த தவறை நியாயப்படுத்தப் பார்க்கிறேன். என் பழைய நினைவுக்குறிப்புகளில் மட்டுமே கமலா இருக்கிறாள். வாழ்க்கை எங்களை எங்கெங்கோ கொண்டு சென்று நிறுத்திவிட்டது. ஒரு புள்ளியில் நாங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது கர்த்தரே. உன் சோதனையில் இதுவும் ஒன்றென நான் சகித்துக் கொள்ளவேண்டுமா?”

 

“உன் பாவத்தைக் கழுவ கர்த்தரே இந்த வாய்ப்பை தர்றாருன்னு நினைச்சிக்க.”

 

டேவிட் கையைப் பிசைந்தபடி, “ஜீஸஸ்! பாவமூட்டையை இறக்கி வைக்க பாவியின் தயவை நாட வேண்டியிருக்கிறதே. என்ன ராயப்பா பூடகமாக பேசுகிறாய் என்ன வாய்ப்பு சொல்லேன் பார்ப்போம்.”

 

“நான் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன். என்ன, ஏதுன்னு கேள்வி கேட்காம என்னோட வர்றணும்.”

 

“ம். சரி! இன்னும் ஒன்ன முழுசா நம்ப முடியலை ராயப்பா. செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடுறியா.. இல்ல உன் பாவத்துல என்னையும் பங்கெடுத்துக்க கூப்பிடுறியான்னு தெரியலை.”

 

இருவரும் கிளம்பினார்கள் காரை ராயப்பன் ஓட்டிவந்தான். கார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிறித்தவ மிஷனரீஸ்ல் நின்றது. காரை விட்டு இறங்கிய டேவிட் தயங்கியபடி உள்ளே நுழைந்தார்.

 

“ராயப்பன் இங்கே என்ன நடக்குது?”

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும் டேவிட்.”

 

மாடிப்படியிலிருந்து கன்னியாஸ்திரி உடையில் கீழே இறங்கி வந்துகொண்டிருந்த கமலாவைப் பார்த்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த டேவிட் திடுக்கிட்டு எழுந்து கொண்டார்.

 

‘ஓ மை லார்டு! இது என் கமலாவா? கர்த்தரே இது என்ன சோதனை மேல் சோதனை. இந்தக் கோலத்தில் கமலாவை நான் பார்க்கவேண்டுமா?’

 

அருகில் வந்த கமலா “நீங்க டேவிட் தானே?” என்று அடையாளம் கண்டுகொண்டு கேட்டாள்.

 

“ஆமாம். அந்த அடிமுட்டாள் நான் தான்.”

 

“என் வாழ்க்கையிலிருந்து போனவர் போனவர்தான்னு நினைச்சிண்டு இருந்தேன். எப்படி இருக்கிங்க?”

 

ராயப்பன் இடைமறித்து “இப்ப அவரு பழைய டேவிட் இல்ல அவருக்குன்னு சொத்து பத்து, ஆள் அம்பு, படை பந்தோபஸ்துன்னு சகஜமும் அவர் பின்னால் இருக்கு” என்றான்.

 

“ஓ! அப்ப உங்களுக்கு மேரேஜ் ஆகி குழந்தைங்கெல்லாம் இருக்கா?”

 

“ஏன் மெளனமா நிற்கிறீங்க டேவிட், கேட்கறாங்கள்ல பதில் சொல்லுங்க.” என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினான் ராயப்பன்.

 

“கமலா உன் எதிரே குற்றவாளிக் கூண்டில் நான் நிற்கிறேன். என் தரப்பை நியாயப்படுத்த முடியாது.”

 

“டேவிட் என்னை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன். நம் எல்லோருக்குமாக அவர் தானே சிலுவை சுமந்தார்.”

 

“இந்தப் பாவி உன்னைக் கைவிட்ட பின் பிதா உனக்கு அபயமளித்திருக்கிறார்.”

 

“இதோ இங்கே உள்ள ஒவ்வொருக்கும் ஒரு கதையுண்டு.”

 

“காதலிக்கிறேன் என்று ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியது பெரும் குற்றமாக உனக்குப் படவில்லையா கமலா? ஐ மீன்! கமலா என்று பெயர் சொல்லலாமா?”

 

“உங்களைப் போல செய்தது தவறு என ஒத்துக்கொள்ள வேறெந்த மனிதராலும் முடியாது.”

 

“ஒத்துக்கொண்டு என்ன பிரயோஜனம் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை அஸ்தமனமாக்கிவிட்டேனே…”

 

“இல்ல இது அஸ்தமனமல்ல புதியவிடியல். கர்த்தருக்காக ஊழியம் செய்வதை பெரும் பாக்கியமா கருதுறேன். இந்த சிலுவையும், பைபிளும் எப்போதும் எனக்கு துணையாய் இருக்கின்றன. எந்த தேவஆட்டுக்குட்டியும் தேவனிடத்தில் வந்து தானே ஆகவேண்டும்.”

 

“வாழ்க்கையில் வசந்தகாலத்தை நீ பறிகொடுத்ததற்கு நான் தானே காரணம்.”

 

“எல்லோரும் அந்திமகாலத்தில் பிதாவிடம் வந்துதானே ஆகவேண்டும். ஒன்றைப் பெறுவதற்கு, ஒன்றை இழந்தாக வேண்டுமல்லவா.”

 

“கமலா நான் உன் வாழ்க்கையில் பிரவேசித்து உன் கனவுகளை சுக்குநூறாக உடைத்ததற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எதுவானாலும் கேள்.”

 

“வாழ்க்கை கடல் உங்களை ஒரு கரையிலும் என்னை ஒரு கரையிலும் ஒதுக்கி உள்ளது. நம் வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்.”

 

“இருபத்தைந்து வருஷமாக குற்றவுணர்ச்சி என்னை மென்று தின்று கொண்டிருந்தது கமலா.”

 

“என்னிடம் அன்பும் பரிவும் காட்டிய மனிதரை இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தவறுசெய்வது மனித இனம் மன்னிப்பு அளிப்பது கடவுளின் குணம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக” எனக் கூறி கமலா இருக்கையிலிருந்து எழுந்துகொண்டாள்.

 

டேவிட் அமைதியாக காரை நோக்கி நடந்தார். மேற்கே மின்னல் வெட்டியது. திரும்பி ஒருமுறை தேவாலயத்தின் மேலுள்ள சிலுவையை பார்த்தார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வரிகள் ஞாபகம் வந்தது. அவை டேவிட்டைப் பொறுத்தவரை கர்த்தரால் சொல்லப்பட்டது அல்ல கமலாவால் சொல்லப்பட்டது.